மாஸ்டர் பீஸ் நாவல். கொஞ்சம் மெனக்கெட்டா திரிஷ்யம் மாதிரி ஒரு நல்ல சினிமாவா இந்த நாவலை கொண்டு வர முடியும்
ஏ.எஸ் பி ராகவன். சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் வீரபத்ரன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை துப்புதுலக்க வர்றார். ராகவன் வயதில் இளைஞன் சாதியில் பிராமிண். அவனுக்கு கேஸில் உதவ கான்ஸ்டபிளாக கோமதி என்ற தலித் துணை வருகிறார். வீரபத்ரன் எப்படிப்பட்ட இன்ஸ்பெக்டர் என்ற தகவலை அதிகார வர்க்கம் ஒருமொழியிலும், எளியவர்க்கம் வேறு மொழியிலும் சொல்கிறது.
இன்ஸ்பெக்டர் வீரபத்ரன் மரணம் வீரபத்ரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியா? அல்லது வீரபத்ரன் செய்த அநீதிக்கு கிடைத்த பரிசா? என்ற கேள்வி எழுகிறது.
கதைக்குள் இலஞ்சி என்ற தலித் பையனும், துல்லியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மைதிலி என்ற பிராமிண் பெண்ணும் என்ட்ரியான பிறகு இந்தக் கேள்வி வலுப்பட்டு கதை வேறுவிதமாக பாய்கிறது. மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அதிகார வர்க்கத்தை கையில் வைத்து எளிய மக்களை சூறையாடும் நபர்களை தன் அறத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் நெருங்குகிறான் ராகவன். அவனுக்குத் துணையாக பேரின்ப நாடார் முதல் சித்திரமேழி என்ற போராட்டக் குழுவினர் வரை உதவுகிறார்கள். தீயோர் முடிவை எட்ட வேண்டும் என மெனக்கெடும் ராகவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் வாசிப்பை வேகப்படுத்துகிறது.
மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடக்கும் இந்தக்கதையில், சாதி, அரசியல், கம்யூனிசம், உழைப்புச் சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாகுபாடு, கோயிலுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் அயோக்கியர்களின் வாழ்வு என நிறையப் பேசப்பட்டுள்ளது
இந்தியாவில் எந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அவர்களின் பண்பாடு மொழி ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. அதை அழிக்க நினைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் உரிமையும் உண்டு. இதைத் தான் ஆர்ட்டிகள் 29 சட்டப்பிரிவு சொல்கிறது. இந்த விசயத்தை முகம்மது யூசுப் கதையின் போக்கில் மிக அழகாக தெளிவுப்படுத்துகிறார்
ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறையில் வளர்ச்சியும் லாபமும் இருந்தால், அதை வளர்ந்த சமூகம் எப்படி கபளீகரம் செய்யும் என்பதை போல்டாக பேசியுள்ளார் ரைட்டர்
நல்ல நாவல்🔥 பரிந்துரைத்த அண்ணன் மணிஜி அவர்களுக்கும் பரிசளித்த கபிலர் அவர்களுக்கும் நன்றிகள்

