காமம் குறித்து
சு. வேணுகோபால் எழுதுகிறார், 👇
“அறிவைப் பிய்த்தெறிந்து விட்டு உடலை மட்டும் உருவி இழுத்துச் சுழற்றும் மாயச்சுழல் அது இல்லை. நினைப்பில் தோன்றி அறிவில் வேர்கொண்டு கற்பனையில் கிளைத்துத் தழைத்துப் பெருகும் பெரு மரம் அது”
வடிவேல் சிறந்த கபடி வீரன். அவன் ஆடும் ஆட்டத்தாலே கனகத்தின் மீதான அவனின் காதல் கைகூடுறது. ஆனால் வாழ்க்கை அதன்பின் வேறோர் கபடி ஆட்டத்தை துவங்கி வைக்கிறது. இரு குழந்தைகள் பிறக்கின்றன. காமத்தின் ஆட்டம் அவன் வாழ்வில் பெரும் சரிவுகளை நிகழ்த்துகிறது. கம்பெனி வேலைக்குச் செல்லும் வடிவேலுவின் காதல் மனைவியான கனகம், குழந்தைகளை விட்டுவிட்டு மேனஜரோடு ஓடி விடுகிறாள். மனைவிக்காக ஊரைவிட்டு கபடியை விட்டு திருப்பூர் வந்த வடிவேலுவிற்கு இந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. அவனின் பால்ய வாழ்வும் பாலியல் சார்ந்த நினைப்பும் அவன் மனதில் வந்து வந்து போகிறது. தன் காதல் மனைவி கனகம் ஓடிப்போனதால் அவனுக்குள் ஏற்படும் இயலாமை அவனை துண்டாடுகிறது., ‘கபடி ப்ளேயருக்கு ஆட்டத்தில் பாடிச்சென்று பாயிண்ட் எடுத்துவிட்டு பிடிபடாமல் திரும்பி வரும்வரை எப்படியொரு பதட்டம் இருக்குமோ அதே பதட்டத்தில் தான் வடிவேலுவின் மனதும் இருக்கிறது.
பாலியல் இச்சையைப் பொறுத்தவரை தொடர்ச்சி மட்டும் தான் உண்டு. முடிவு என்பதே கிடையாது. முடிந்தது போன்ற ஒரு கற்பனையை செய்துகொண்டு உடனே அதற்கோர் கமா போட்டுக்கொள்வோம் நாம். காமத்தின் வீரியம் வாழ்தலை விட பெரியது.
காளையன் என்ற தன் சக வயது நண்பன், முறை தவறி தான் உறவு கொண்ட ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறான். அவனுக்குச் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் பின்னுக்குப் போய் அவன் சொல்லும் உடலுறவு காட்சிகளை ஆராய்வதிலே நிலைகொள்கிறது வடிவேலுவின் மனது. இப்படி காமம் உணர்வு ரீதியாக மனிதனுக்குள் ஏற்படுத்தும் வேகத்தை, தாகத்தை, சோகத்தையெல்லாம் இந்த நாவல் துல்லியமாக பேசுகிறது. பொய்பூச்சு இல்லாத சு.வேணுகோபாலின் இந்த ஆட்டம் பயத்தை வரவழைத்து நிஜத்தை உணர வைக்கும் உண்மைக்கு நெருக்கமான நாவல்
Good one

