சாகாவரம்
நாவலைப்பற்றி பேசும் முன் ஒரு உண்மைச் சம்பவம்.
எங்க ஊர்ல வைத்திமாமான்னு ஒருத்தர் உண்டு. நிறைய தடவ அவரப்பத்தி எழுதிருக்கேன். எவ்வளவு எழுதுனாலும் முழுசா எழுதித்தீக்க முடியாத விசய ஞானம் கொண்ட மனுசன் அவரு. நிலையாமைய பத்தி வள்ளுவர விட அதிகமா பேசுறவரு வைத்திமாமா. 20 வருசத்துக்கு முன்னாடி எங்கூர் பெட்டிக்கடை திரணையில இருந்து, நைட்டு பத்துமணி வாக்குல பெட்டிக்கடை குட்டியண்ணன், சூலகருப்பர் அண்ணாச்சி, கண்ணு தெரியாத குமரேசன் மாமா, வைத்திமாமா உக்காந்து பேசுனாங்கன்னா தெருவுல போற வார ஆள்க்கலாம் நின்னு கேட்டுச் சிரிச்சுட்டுப் போவுங்க. ஜாலியா பேச ஆரம்பிப்பாங்க. லாஸ்டா பேச்ச முடிக்கும் போது அவங்களுக்கு முன்னாடி போய்ச்சேந்த பெரியாள்க்களைப் பத்தி பேசுவாங்க. “ஏ வைத்தி ச்சே எப்பேர்ப்பட்ட ஆள்வளலாம் எழந்துட்டோமப்பா” ம்பாரு குமரேசன் மாமா.
“பன்னா சாமி, தவுடன் அப்பா, மூக்கநாடாரு, சூப்ரவேசரு, மாடக்கண்ணு பயன்னு இவங்களலாம் நினைச்சா தூக்கமே வராதுப்பா”ம்பாரு. வைத்திமாமா
“பச்..வைத்தி என்ன வாழ்க்கண்ணே? இதுலாம் ஒன்னுமில்லப்பா”ம்பாரு சூல கருப்பர் அண்ணாச்சி.
இவங்க பேசுததை எல்லாம் ஆங் போட்டு கேக்குற குட்டியண்ணன், அமைதியா இருப்பாரு. இவங்களுல இப்ப வைத்திமாமா மட்டும் தான் இருக்காரு. ஒரு அதிர்ச்சியான சம்பவத்துல குமரேசன் மாமா போனாரு. நீரழிவு நோய் ஏர்க்குமாறா ஏறி சூல கருப்பர் அண்ணாச்சி போனாரு. வாழ்க்கையில எந்த கெட்டப்பழக்கத்தையும் கிட்டச் சேக்காத குட்டியண்ணன் பெரு நோவு தாக்க போய்ச்சேந்தாரு.
இவங்க போய்ச்சேந்த பெறவு வைத்திமாமா பெட்டிக்கடை திரணையில அவ்வளவா உட்கார மாட்டாரு. நான் ஊருக்குப் போம்போதுலாம் வற்புறுத்தி அவரை உட்கார வச்சி பழைய கதைவள கேப்பேன். மனுச வாழ்க்கை ஒன்னுமில்லாத ஒன்னுன்னு ஓயாமச் சொல்லுவாரு. இதைத்தான் இந்தப்புத்தகமும் பேசுது
வெ.இறையன்பு எழுதுன இந்த சாகாவரம் நூல் மர*ண பயம் குறித்த கேள்விக்கு ஆகச்சிறப்பா பதில் சொல்லுது.
தாவரவியல் படித்த நசிகேதன் ஓர் ஆசிரியர். அவர் தொடர்ச்சியா தனக்கு நெருக்கமானவங்களோட மர*ணத்தைப் பார்க்குறாரு. அதனால துறவு வாழ்க்கைக்கி போறாப்டி. அங்க மர*ணமில்லா பெருவாழ்வு இருக்குன்னு தவியா தவிச்சி அந்த வாழ்க்கைய அடையுறார். அப்புறம் தான் அவருக்கு மர*ணம்றது வாழ்க்கையோட அந்திமம் கிடையாது. அது இயற்கையோட சங்கமம்னு புரியுது
ரொம்பச் சிம்பிளா கதையை நகர்த்துற இறையன்பு நூலுக்குள்ள ஆகப்பெரிய விசயத்தை டிஸ்கஸ் பண்ணிருக்காரு. “ஏய் நான் யார் தெரியுமா?” அப்படின்னு உங்க மனசும் உங்க அறிவும் உங்களை உசுப்பேத்துனா, இதைமாதிரி பேசினவங்களோட கல்லறை பக்கம் கொஞ்சம் ஒதுங்கிப் பாருங்க. நிச்சயம் மனசு ரீ திங் பண்ணும்.. பண்ணனும். எனக்கு வைத்திமாமா சொன்ன வாழ்க்கை பாடத்தை இறையன்பு நிறைய பேருக்கு இந்த நூல் மூலமா கடத்துறாரு
படிச்சிப் பாருங்க

