மண்சார்ந்த கதையோடு களம் இறங்கியுள்ளார் இயக்குநர் சுகவனம்
கொங்கு பெல்டை மையமாக கொண்ட கிராமம் ஒன்றில், கஷ்ட ஜீவனம் நடத்துகிறார் புரோட்டோ முருகேசன். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த அவர் தனது மகனை சிறுவயதில் பிழைக்க வைத்தது கிராம தெய்வமான ஒண்டிமுனி தான் என நம்புகிறார். அதனால் ஒண்டிமுனிக்கு ஒரு கிடாவை நேமிக்கிறார். ஆனால் ஊரில் இரு பண்ணாடிகள் (பண்ணையார்கள்) ஒண்டிமுனிக்கு திருவிழா எடுக்க தடை போடுகிறார்கள். புரோட்டா முருகேசன் மகனும் வளர்கிறார். கிடாவும் வளர்கிறது. மேலும் பண்ணாடிகளில் ஒருவர் கிராம மக்களின் நிலத்தை அபேஸ் செய்யும் முயற்சியும் கதையில் இருக்கிறது. ‘படையிருந்தும் பயந்த ஜனமான’ புரோட்டா முருகேசன் வகையறா எழுந்து மீள்கிறதா என்பதே படத்தின் கதை
நல்லபாடன் என்ற கேரக்டரில் கொங்கு ஸ்லாங் பேசி நம் மனதை நிறைக்கிறார் புரோட்டா முருகேசன். அவரின் நடிப்பே படத்தை நம்மோடு ஒன்ற வைக்கிறது. அவரின் மகனாக வரும் விஜயன் தானொரு கூத்துப்பட்டறை ஆர்டிஸ்ட் என்பதை நிரூபிக்கிறார். அவர் கேரக்டரை இன்னும் வலிமையோடு இயக்குநர் எழுதியிருக்கலாம். சித்ரா நடராஜன், முருகன், சேனாதிபதி, விகடன் உள்ளிட்ட எல்லா கேரக்டர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் விமல் தனது கேமராவை கதையின் ரிதமறிந்து இயக்கியிருக்கிறார். நிறைய ஷாட்ஸ்கள் லைல்-ஆக இருந்தது. NTR-ன் பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். ஆங்காங்கே பேக்ரவுண்டில் மண்சார்ந்த சில பாடல்களை ஒலிக்க விட்டிருக்கலாம். சதிஷ் குரோசாவ் கூடுமான வரை ஷார்ப்பான எடிட்டிங்-ஐ தந்துள்ளார்
படத்தில் மண்வாசனை மிகுந்து நம்மை கொங்கு மண்டலத்திற்கே அழைத்துச் செல்கிறது. படத்திற்கு அது பெரும் பலம் தான். ஆனால் திரைக்கதையில் இன்னும் பெரிய தாக்கம் நிரம்பியிருந்திருக்க வேண்டும். நல்ல நல்ல.எமோஷ்னல்ஸ் எல்லாம் துண்டு துண்டாக தொக்கி நிற்கிறது. க்ளைமாக்ஸில் சிறுவன் மூலமாக எடுக்கப்பட்ட கொல்லாமை லெசன் வேறலெவல். கிராமத்துப் பெண்கள் பைக் வைத்திருந்தால் லவ்விற்கு ஒகே சொல்லி விடுவார்கள் என்பதெல்லாம் அபத்தம்!
சண்டை, க்ரைம், என மண்டையை சூடாக்கும் சினிமாக்களுக்கு மத்தியில், நம் பண்பாட்டை பேசியுள்ளார் இயக்குநர் சுகவனம். அதற்காக இந்த ஒண்டிமுனியை நாம் நல்லா பாடலாம்
3/5
-வெண்பா தமிழ்

