இறையன்பு எழுத்தில் நேர்மறை மட்டுமே குடி கொண்டிருக்கும். ஆரம்பக் கட்ட வாசிப்பாளர்களுக்கு அவரது நூல்களை தாராளமாக பரிந்துரைக்கலாம். ஆன்றோர் சான்றோர் நமக்களித்த நிறைய பாசிட்டிவ் சொற்களை தேர்ந்தெடுத்து நூலெங்கும் தொகுப்பார். அப்படியே சில சம்பவங்களும் நறுக்கென்றிருக்கும்
ஒரு ஹோட்டலில் “எங்கள் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்தால் அவர்கள் வாடிக்கையாளர்களை தரம் பிரிக்கத் துவங்கிவிடுவார்கள். அதற்கென்று வைத்திருக்கும் உண்டியலில் போடுங்கள். நாங்கள் பணிபுரியும் அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கிறோம்” என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டிருந்தார் இறையன்பு.
எனக்கு ஒரு ஹோட்டலில் சுத்தம் செய்யும் அம்மா ஒருவர், “எங்களுக்குலாம் யாருப்பா டிப்ஸ் தர்றாங்க” என்று கேட்டது நினைவுக்கு வந்தது. டிப்ஸ் பணத்தை சம்பளத்தில் கழித்துக் கொள்ளும் முதலாளிகளும் உண்டு. 2007 கால கட்டத்தில் சரவணபவன் ஹோட்டலில் டிப்ஸுக்கு நாட் அல்லோவ்டு! அதே சமயம் ஒரு கஸ்டமர் 100-க்கு சாப்பிட்டால் சர்வ் செய்தவருக்கு ஒரு ரூபாய் ஹோட்டலே டிப்ஸ் வழங்கும். நான் அப்போது சாம்பார் ஊற்றும் வேலை செய்தேன். சர்வர் வேலைக்காக பயங்கர ப்ரயத்தனப் பட்டேன். நான்கு மாசம் ஆகும் என்றார்கள். நான் இரண்டு வாரத்தில் ஓடி வந்ததால் டிப்ஸ் லைப்பிற்குள் செல்லவில்லை. ஆனால் சரவணபவனில் சாப்பிட்டு டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு முன்னேற வேண்டும் என்ற லட்சியம்லாம் இருந்தது.
ஒரு எழுத்து இப்படியான தனிப்பட்ட வாழ்விற்குள் இழுத்துச் சென்றால் அந்த நூல் எனக்கு நெருக்கமானதாக மாறிவிடும். அந்த வகையில் இறையன்புவின் இந்நூல் எனக்கு சிறந்த ஒன்று
உழைப்பைப் பற்றிச் சொல்லும் கட்டுரையை விட இழப்பை எதிர்கொள்ளும் திறனைச் சொல்லும் கட்டுரை ஆகத்தரம்

