இந்திய சினிமாவில் கோர்ட் ட்ராமா படங்கள் எப்போதும் கவனம் ஈர்க்கும். அந்தக்காலத்தில் வெளியான விதி படம் முதல் சமீபத்தில் வெளியான மலையாளப் படமான நேரு படம் வரை கோர்ட் ட்ராமா படங்கள் கவனம் ஈர்த்தே வருகின்றன. அப்படியான கோர்ட் ட்ராமா படம் என புரொமோஷன் செய்யப்பட்ட இந்த வில் படமும் வெற்றிப்பட்டியலில் சேருமா?
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அலிகியா தன் தந்தையின் கெளரவத்தைக் காப்பாற்ற, ஒரு பெரும் வயதான பைனான்ஸியரிடம் 7 லட்சம் கடன் வாங்குகிறார். கடன் கொடுத்த நபர் ஒரு கட்டத்தில் தனது 2 கோடி ரூபாய் சொத்தை அலிகியா பெயரில் எழுதி வைக்கிறார். இதற்கு எதிராக அவரின் குடும்பம் நீதிமன்றம் செல்கிறது. அலிகியாவிற்குப் பதிலாக வேறோர் பெண்ணைக் காட்டி சொத்தை மாற்றி எழுத முயற்சிக்கிறது அக்குடும்பம். சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்த் இதைக் கண்டுபிடிக்கிறார். அவரின் விசாரணையிலிருந்து தான் படமே துவங்குகிறது. விக்ராந்தின் விசாரணையை நீதிபதி சோனியா அகர்வல் எப்படி டீல் செய்தார் என்பதும், அலிகியாவுக்கும் வயதான பணக்கார பைனான்ஸியருக்கும் என்ன உறவு? என்பதை நோக்கி படத்தின் திரைக்கதை பயணிக்கிறது
கதையின் நாயகியாக அலிகியா நல்ல நடிப்பையே கொடுத்துள்ளார். இயல்பான நம்மூர் பெண் போல இருக்கிறார். விக்ராந்த் நடிப்பில் பெரிய குறையில்லை. பாவம் அவர் சிறப்புத் தோற்றமாகவே வருகிறார். சோனியா அகர்வால் நீதிபதிக்கான தோரணையை நடிப்பில் கொண்டு வர முயற்சித்துள்ளார்
படத்தின் பெரிய ட்ராபேக் ஆக இருக்கிறது செளரப் அகர்வாலின் பின்னணி இசை. பாடல்களும் கவனம் ஈர்க்கவில்லை. TS பிரசன்னா ஒளிப்பதிவில் இன்னும் தனிக்கவனம் செலுத்தியிருக்கலாம்
இயக்குநர் S.சிவராமன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை எழுதியுள்ளார். கதையை தேர்ந்தெடுத்ததில் பெரிய துணிச்சல் தெரிகிறது. ஆனால் திரைக்கதை மிகவும் வலுவற்றதாக நம்மை வாட்டுகிறது. சின்னச் சின்ன மெசேஜ்கள் படத்தில் நன்றாகயிருந்தாலும், இன்னும் அழுத்தமான திரைக்கதையை அமைத்திருந்தால் வில் தில்-ஆக இருந்திருக்கும்
2.5/5
-வெண்பா தமிழ்

