விஷ்வநாத்& சன்ஸ்- விமர்சனம்

“அன்பு என்பது ஆள்பார்த்து வரக்கூடாது… நேரம் பார்த்து தரக்கூடாது” மேலும் அன்பிற்கு வயது அந்தஸ்து எதுவுமே தடையில்லை என்ற பாடத்தை நெற்றிப்பொட்டில் சொல்லி நம் புத்திக்குள் ஏற்றுகிறது படம்!

துப்பாக்கி சுடும் போட்டியில் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் 42 வயது பேச்சுலர் பிஸ்னெஸ்மேன் சூர்யா. அவருக்கு அம்மா ராதிகா என்றால் உயிர். ராதிகாவின் ஒரே ஆசை சூர்யாவிற்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது. But சூர்யா திருமணம் வேண்டாம் என்ற முடிவில் தீர்மானமாக இருக்கிறார். அதற்கு ஒரு வேல்யூ ரீசனும் இருக்கிறது. அதனால் அம்மா ஆசைக்காக சூர்யா தனது உயிரணுவை வேறோர் பெண்ணின் கருமுட்டையில் வைத்து ஒரு மகனை தருவித்து தன் அம்மாவிற்கு தருகிறார். சூர்யாவின் மகனை வயிற்றில் சுமந்து பெற்ற பெண்… சாட்சாத் நம்ம மமிதா பைஜு தான். வாடகைத் தாய் ஒரிஜினல் தாய் ஆக நடக்கும் முயற்சியும் முடிவும் தான் படத்தின் மீதிக்கதை

சூர்யா ஆகச்சிறப்பான நடிப்பால் நம் மனதில் நீக்கமற நிறைகிறார். ராதிகா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் சூர்யாவின் எமோஷ்னல் நடிப்பு நம் கண்களை குளமாக்குகிறது. மமிதா பைஜு படத்தை தன் துறுதுறு நடிப்பால் தூக்கிச் சுமக்கிறார். அவரின் க்யூட்னெஸ் தான் படத்தின் பெரு எனர்ஜி எனலாம். நம் தாய்கிழவி ராதிகா காட்டியிருக்கும் அனுபவ நடிப்பு படத்தின் உயிர்த்துடிப்பு. ரவிபாண்டன் உள்ளிட்ட பல கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன. இயக்குநர் வெங்கி அட்லூரி பெண் கேரக்டர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருப்பது பெரு மகிழ்வுக்குரியது

படத்தின் ஜீவனை காப்பாற்றிருக்கிறார் ஜிவி பிரகாஷ். பாடல்களிலும் பின்னணி இசையிலும் எமோஷ்னல் அதிர்வு இருந்து கொண்டேயிருக்கிறது. வெரி வெரி ஸ்மார்ட்டான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் நிமிஷ் ரவி.

ஒரு கவிதை போல நகரும் முன்பாதி நம்மை முழுக்க முழுக்க உற்சாகப்படுத்துகிறது. அதன்பின் கவித்துமான சிறுகதை வாசிக்கும் மனநிலைக்கு நம்மை இட்டுச்செல்கிறது இரண்டாம் பாதி. ஒவ்வொரு கேரக்டர்களுக்கான தேவைகளையும் ஹீரோவை வைத்து தீர்வு காணும் எல்லாக் காட்சிகளுமே அட்டகாசம். உறவுகள் குறித்து ஹீரோ உணரும் இடங்களும் உணர்த்தும் இடங்களும் அடடா ரகம். நிச்சயமாக தியேட்டருக்கு நம்பிச் செல்லலாம். ஒரு செல்லுலாய்ட் கவிதை இந்தப்படம்
3.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *