பாடத்தைக் கூட படமாக மாற்றுவது தான் நல்ல திரைக்கதை. இந்த ஸ்கூல் படக்குழுவினர் அதைச் செய்துள்ளனரா?
பகவதி பெருமாள் பள்ளிக்கூடத்தை முதல் தரத்திற்கு மாற்ற வேண்டி ஒரு மோட்டிவேசன் புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை வாசிக்கும் மாணவர்கள் நெகட்டிவ் மனநிலைக்குச் செல்கிறார்கள். மேலும் அந்த ஸ்கூலில் நிறைய அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அதைக் கண்டுபிடிக்க காவல் அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் வருகிறார் இந்த அமானுஷ்யங்களுக்கும் கதையின் மையக் கதாப்பாத்திரங்களான யோகிபாபு பூமிகாவிற்கும் என்ன சம்பந்தம்? இதற்கான விடை தான் ஸ்கூல்
கதையின் நாயகன் யோகிபாபு காமெடியை விட குணச்சித்திர நடிப்பில் கவர்கிறார். பூமிகா அமைதியான முகத்தோடு அருமையாக நடித்துள்ளார். பகவதி பெருமாள், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட எல்லாக் கேரக்டர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையைச் சிறப்புறச் செய்துள்ளனர்.
படத்தில் ஒளிப்பதிவாளர் தன்னால் முடிந்தளவு திறம்பட உழைத்துள்ளார். இசை அமைப்பாளருக்கும் மேற்சொன்ன வார்த்தைகள் பொருந்தும். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் ஓகே ரகம் தான்
படத்தின் பிரதான பிரச்சனையே..படமெங்கும் தெறிக்கும் பிரச்சார நெடிதான். அட்வைஸ்களாக ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில்..ஸ்ப்பா முடியல என்ற ரேஞ்சிற்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இருந்தாலும் சொன்ன விசயங்கள் எல்லாமே சிறப்பானது தான். சமூக மதிப்பு என்பது, மதிப்பெண்களில் மட்டும் இல்லை என்று சொன்னது சூப்பர்.. இதை இன்னும் நல்ல சினிமாவாகச் சொல்லியிருக்கலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

