சில ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு படம் மீது துளியும் எதிர்பார்ப்பில்லை. ஆனால் படம் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்தது. பெரிய வெற்றியும் பெற்றது. இப்போது காளிதாஸ் 2 நல்ல எதிர்பார்ப்போடு வந்துள்ளது. மெடிக்கல் மிராக்கிளாக இரண்டாம் பாகமும் ஆடியன்ஸை ஈர்க்கும் தன்மையோடு வந்திருக்கிறது. படக்குழுவிற்கு நம் வாழ்த்துகள்.
துப்பறியும் படங்களுக்கு கதை என்பது ஒரேயொரு சம்பவமாக இருந்தால் போதும். திரைக்கதை தான் பெரும் சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் இந்தப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த் அப்படியான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்
சென்னையின் புறநகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு வயது குழந்தை மிஸ்ஸிங். அதை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் பரத். ம்ற்றொரு அதிகாரியான பவானி ஸ்ரீயும் விசாரிக்கிறார். மிஸ் ஆன குழந்தை இறந்தும் விட காவல்துறை பரபரக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளில் ஒருவரான அஜய் கார்த்தி மீது காவல்துறையின் சந்தேகப்பார்வை விழுகிறது. அவரை நீதிமன்றம் இழுத்துச்செல்லும் போது பிரகாஷ்ராஜ் அவரை காப்பாற்றி விடுகிறார். அதன்பின் இன்னொரு குழந்தை காணாமல் போகிறது. கதை சூடு பிடிக்கிறது. குற்றவாளி யார் என்ற தேடுதல் வேட்டையில் பரத் எப்படி வெல்கிறார் என்பதே மீதி திரைக்கதை
தெளிவான பார்வை, தீர்க்கமான அணுகுமுறை என பரத் தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார். பவானி ஸ்ரீ கொடுத்த வேலைக்கு குறைவின்றி நிறை செய்துள்ளார். அஜய் கார்த்தி நடிப்பு படத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. பூவே உனக்காக சங்கீதா டிபரண்ட் ரோலில் வருகிறார். பிரகாஷ்ராஜ், அபர்ணதி, கிஷோர், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்
ஒளிப்பதிவாளர் சுரேஷ்பாலா தரமான விஷுவலை கொடுத்து விசில் போட வைக்கிறார். படத்திற்கு என தனித்த கலர்-ஐ செட் செய்து அசத்தியுள்ளார். டிஐ வொர்க்கும் பக்கா. சாம் சி எஸ் பின்னணி இசையில் என்றுமே நான் தான் முன்னணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கிரேட்!
இயக்குநர் ஸ்ரீ செந்தில் தரமான அவுட்புட்-ஐ கொடுத்துள்ளார். கதையும் காட்சி அமைப்புகளும் ரசிகனின் நேரத்தையும் பணத்தையும் மதித்து செப்பனிடப்பட்டுள்ளது. ஒரு சிறிய விதைக்குள் பெரிய விருட்சம் இருப்பது போல இந்தக்குட்டி கதைக்குள் ஆகப்பெரிய திரைக்கதை உள்ளது.
ஒரே வரியில் சொல்வதானால்,
இந்த காளிதாஸ் ரசிகனுக்கு நோ லாஸ்… யெஸ் படம் கொலமாஸ்
4/5
-வெண்பா தமிழ்

