தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் தொழில் வளர்ச்சியிலும் கண்டுபிடிப்பிலும் அசுரப்பாய்ச்சலை நிகழ்த்திய கோவையின் அடையாளமான அமரர் ஜி.டி நாயுடுவின் வாழ்வை கமர்சியல் அம்சங்களோடு கொடுக்க முயன்றுள்ளனர்
1914-ஆம் ஆண்டு இளைஞராக இருக்கும் மாதவன், வெள்ளைக்காரர் ஒருவர் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் மீது காதல் கொள்கிறார். பெரும்பாடு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குகிறார். அதன்பின் மோட்டார் சைக்கிளின் இயக்கத்தை கற்றுத்தெளிகிறார். புதியபுதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய அவரது பயணத்திற்கு பெருந்தடை போடும் சூழ்ச்சி நடக்கிறது. அந்த சூழ்ச்சியில் விழுந்து, விழுந்து, அயர்ந்து, பின் எழுந்து நிற்கிறார் நாயுடு. அவரின் தடைகள் தாண்டிய பயணம் தான் படத்தின் கதை
ஜி.டி.நாயுடுவாக வாழ முயற்சித்துள்ளார் மாதவன். சில இடங்களில் அசத்தும் மாதவன், வெகுசில இடங்களில் சற்று மிகை நடிப்பைத் தந்துள்ளார். பிரியாமணி கேரக்டர் படத்தில் மருந்தளவிற்கு தான் என்றாலும் அவர் தன் இருப்பை அழகாகப் பதிவு செய்துள்ளார். துஷாரா விஜயன் நல்லதொரு நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் வெகு காலத்திற்குப் பிறகு நல்லதொரு கேரக்டரில் தோன்றி நல்லதொரு நடிப்பைக் கொடுத்துள்ளார். கருணாகரன், ஜெயராம், அதிதி பாலன், வினய் ராய் என நம் கவனிப்பை ஈர்க்கும் நடிகர்களும் படத்திலுண்டு
கோவிந்த் வசந்தா தன் பின்னணி இசையால் படம் கடத்தும் உணர்விற்குள் நம்மை கொண்டு செல்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் தரமான விஷுவல் அனுபவத்தைக் கொடுத்துள்ளார். மாதவன் & கோ ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்திக்கும் காட்சியை AI- மற்றும் கிராபிக்ஸ் துணையோடு ஓரளவு நன்றாகவே எடுத்துள்ளனர்
நாயுடுவின் சாதனைகளைச் சொல்லும் படம்,அவரது கண்டுபிடிப்புகளை விட, அவருக்கு நடந்த சூழ்ச்சிகளையே அதிகம் பேசுகிறது. May be படத்தின் கமர்சியல் வேல்யூவிற்கு அத்தகைய காட்சிகள் தான் உதவும் என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஜி.டி நாயுடுவின் திறமையின் பால் அந்நியர்க்கு இருந்த பொறாமை நம் இந்தியர்க்கும் இருந்தது என்பது தான் சோகம். அதைச் சமரசமில்லாமல் பதிவு செய்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். கொஞ்சம் பிசகினாலும் டாகுமெண்ட்ரி ஜோனுக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ள கதையை ஓரளவு கமர்சியலாக தந்து கரை சேர்த்துள்ளனர். நிச்சயமாக நம் தலைமுறை ஒருமுறை பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய படம்
3.25/5
-வெண்பா தமிழ்

