சீரியல் கில்லரின் ஒரு சீரியஸ் பேக் ஸ்டோரியே இந்த லெவன்
ஹீரோ நவீன் சந்திரா ஒரு Asst கமிஷ்னர். சிட்டியில் நடக்கும் தொடர்கொலைகளை விசாரித்து வருகிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் சிக்காத கொலையாளி, ஒரு கட்டத்தில் தனது பின்கதை என்ன என்பதை தெரியப்படுத்துகிறான்..அந்தக் கொலையாளி யார்? அவன் பின்கதை என்ன? என்பதை திரைக்கதை விவரிக்கிறது.
கதையின் நாயகனாக நவீன் சந்திரா தனது சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் கச்சிதம். திலிபன் நல்லதொரு கேரக்டரை ஏற்றுள்ளார். ரேயா ஹரி, ரித்விகா உள்ளிட்டவர்கள் ஒரு Small என்ட்ரி போட்டுள்ளனர். பள்ளி ஆசிரியையாக வரும் அபிராமி படத்தின் இரண்டாம் பாதிக்கு பெரும் கனம் சேர்க்கிறார்.
இமான் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசையில் நல்ல திரில்லர் எபெக்ட் கிடைக்கிறது. கார்த்திக் அசோகன் இரவின் அடர்த்தியையும் பகலின் மலர்ச்சியையும் தன் கேமராவிற்குள் கொண்டு வந்துள்ளார். பல்வேறு திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை தன் சிறப்பான கட்ஸ்களால் மெருகேற்றியுள்ளார் எடிட்டர் ஸ்ரீகாந்த் N.B.
தொழில் நுட்பங்களிலும் நடிகர்களின் தேர்வுகளிலும் பாஸ்மார்க் அல்ல செண்டமே அடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் அஜிஸ். பின்பாதியில் வரும் கொலையாளியின் பின்கதையும் அதில் நடித்துள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளும் அசத்தல் ரகம்.
பதினொரு ட்வின்ஸ்-ஐ வைத்து அதற்குள் யூகிக்கவே முடியாத ட்விஸ்ட்களை வைத்து, அதற்குள் ஒரு எமோஷ்னலை வைத்து திரைக்கதை அமைத்த விதம் சூப்பர். இவையெல்லாம் தனித்தனியாக நன்றாக உள்ளதே தவிர, ஒரு கலவையாக முழு திருப்தியை தரவில்லை. ஆயினும் நிச்சயமாக இந்த லெவன் திரில்லர் விரும்பிகளை ஏமாற்றாது. சிறந்த படம் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மிகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டிய படம்.
2.75/5
- வெண்பா தமிழ்

