நாலு வார்த்தை கூடுதலா சொல்லி தட்டிக் கொடுத்தா ஒன்னும் குறைஞ்சிட போறதில்ல..பதிலுக்கு அன்பும் பொருளும் கூடத்தான் செய்யும்…
பிரச்சனை கிளம்பும் போதே கிள்ளியெறியும் குணம் வாய்த்தவள் ஸ்ரீதேவி கடாட்சம்… பிரச்சனையின் வேரை அறியாமல் கிளைகள் போடும் ஆட்டத்தை வைத்துக் கணக்குப் போட்டால் குடும்பத்தில் கொண்டாட்டம் போய் தள்ளாட்டமே மிஞ்சும்.. ஒரு பெண் சூலுற்றிருப்பதில் முடிவதல்ல திருமண வாழ்க்கை… அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கிறது
ஒரு ஆணுக்கு தாயும் தாரமும் எவ்வளவு முக்கியம் என்பதை வாழ்ந்து அனுபவித்து எழுதிருப்பதால் பக்கத்திற்கு பக்கம் பாடம் கொட்டிக்கிடக்கிறது…
தாய் தாரம் இருவரில் யாரன்பில் உண்மை இருக்கிறது என்று ஆராய்பவன் அடிமுட்டாள்.. அன்பு என்பது நிரந்தர வஸ்த்து..அதை வெளிப்படுத்தும் வடிவத்தில் சில சிக்கல்கள் இருக்குமே ஒழிய அன்பில் சிக்கல் இருக்காது. அதை உறுதியாக நம்பி இரு தரப்பையும் சரியாக கையாளத் தெரிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி.. இல்லத்தைத் திருப்தி படுத்தாதவன் வேறு என்னத்தைச் சாதித்தும் என்ன பயன்?
இப்படி நிறைய விசயங்களை யோசிக்க வைத்த நூல்.
திருமணம் முடிந்ததும் ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் ஏற்படும் மன ரீதியான பிரச்சனைகளையும் இன்பங்களையும் எப்படி கையாள வேண்டும் என்பதை நயம்பட எடுத்துரைக்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
கதை போன்ற கட்டுரைகள் என்பதால் சில சம்பவங்கள் இயல்பை மீறியவையாகத்தான் இருக்கிறது. பட் அதில் லாஜிக் பார்த்தால் மேஜிக் அனுபவம் கிடைக்காது…
வாழ்க்கையே மேஜிக் தானே

