உலகிலே ஆகச்சிறந்த மொழி மெளனம். அந்த மொழியால் மட்டும் தான் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளாலும் பேச முடியும். ஆக தமிழில் நீண்ட காலத்திற்குப் பின் நடிகர்கள் யாரும் வசனமே பேசாத ஒரு மெளன படம் வெளியாகியுள்ளது
நாயகன் விஜய்சேதுபதி மும்பையிலுள்ள வறுமை பேசும் ஒரு நிலத்தில் தன் நோய்மை நிரம்பிய அம்மாவோடு கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார். லஞ்சமின்றி வேலை பெற முடியாது என்ற நிதர்சனத்தோடு போராடுகிறார். இப்போராட்டத்தின் நடுவே அதீதி ராவோடு காதல் வேறு. இன்னொரு புறம் அரவிந்தசாமி பெருங்கோடிஸ்வரர். அவரின் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் பெரும் இழப்பில் முடிகிறது. அதனால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள முடிவெடுக்கிறார். அரவிந்தசாமி எடுக்கும் முடிவும், விஜய்சேதுபதி எடுக்கும் முடிவும் என்ன் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதை
மக்கள் செல்வனை இனி நடிப்புச் செல்வன் என்று சொல்லலாம். விஜய்சேதுபதி நடிப்பால் படத்தை பெரிதாக தாங்கியுள்ளார். தன் தாயுடன் வரும் காட்சிகளிலும், காதலியுடன் மல்லுக்கட்டும் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். எலைட் மனிதராக வரும் அரவிந்தசாமி வெகு இயல்பாக கேரக்டரோடு பொருந்தியுள்ளார். அதீதிராவ் மிகச்சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஜாதவ் சித்தார்த் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்
ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் இன்னொரு ஹீரோவாக வசீகரிக்கிறார். மொழி இல்லாத படத்தை தன் ஒலியால் நிரப்புகிறார் ஏ.ஆர் ரஹ்மான். கரன் சாவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு ஆன்மா. அதியற்புதமான ஷாட்களால் கவனம் ஈர்க்கிறார் கரன் சாவத்
இருண்மை பொருந்தி தொடரும் லஞ்சமும் வஞ்சமும் நீடித்த தன்மை கொண்டது அல்ல. நிச்சயமாக அதற்கு மாற்று உண்டு. இந்த நிதர்சனத்தைப் படம் அழகாக பேசியுள்ளது. காந்தியின் பெயரைத் தாங்கியுள்ள இப்படத்தை அவரின் நேர்மையைக் கொண்டு முடித்தது சாலச்சிறப்பு. முன்பாதி தந்த நேர்த்தி பின்பாதியில் முழுமையாக கைகூடாவிட்டாலும், க்ளைமாக்ஸ் ஒரு நிறைவைத் தருகிறது. வசனங்கள் தேவையற்ற படம் என்று இதைச் சொல்ல முடியவில்லை என்பதும் நிஜம்
3/5
-வெண்பா தமிழ்

