படையாண்ட மாவீரா- விமர்சனம்

தமிழக அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி தவிர்க்க முடியாத கட்சி என்றால், அந்தக் கட்சியில் அங்கம் வகித்த காடுவெட்டி குரு என்பவரும் தவிர்க்க முடியாதவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி நடித்துள்ளார் வ.கெளதமன்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காடுவெட்டி குரு 1988 காலகட்டத்தில் திமுகவில் இருந்தவர். பின் அங்கிருந்து விலகி வன்னியர் சங்கத்திற்கு வந்து, பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார். வன்னியர் இன மக்களுக்காக பெரிதாக களமாடிய படைவீரர் அவர். ஆனால் பொருளாதார ரீதியாக எதையும் அவர் சம்பாதிக்கவில்லை. அவரின் மரணத்தின் போது மிகவும் கஷ்டத்தையே அனுபவித்தார். இவையெல்லாவற்றையும் படமாக்கியுள்ளார் இயக்குநர் கெளதமன். கூடவே சிலபல கமர்சியல் வில்லன்களாக போலீஸ் ஆகியோரைச் சேர்த்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி குருவையும் அவர் குடும்பத்தையும் கை விட்டதை ஏனோ இயக்குநர் காட்டாமல் தவிர்த்துள்ளார்

நடிகராக வ.கெளதமன் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவரது மகன் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். நாயகி புஜிதா பொன்னடாவிற்கு படத்தில் வேலையேயில்லை. சரண்யா பொன்வண்ணன் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். ஆடுகளம் நரேன், சமுத்திரக்கனி ஆகியோர் சின்னதாக அட்டனன்ஸ் போடுகிறார்கள். கிங்ஸ்ட்லி மன்சூர் அலிகான் இருவரும் கவனிக்க வைத்துள்ளனர். பாகுபலி பிரபாகர் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்.

சாம் சி எஸ் பின்னணி இசையில் அதிக இரைச்சலைத் தந்துள்ளார். ஒருசில இடங்களில் ஒகே. ஒளிப்பதிவாளர் முந்திரிக்காட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பையும் கச்சிதமாக படம்பிடித்துள்ளார். எடிட்டர் இன்னும் 20 நிமிட படத்தை வெட்டியிருக்கலாம்

காடுவெட்டி குரு என்பவர் பெரும்பாலான மக்கள் மத்தியில் சாதிவெறியர் என்றே பதிந்துள்ளார். ஆனால் இந்தப்படம் அதை மாற்றும் வகையில் உருவாகியுள்ளது. படத்தில் பேசப்பட்டுள்ள வரலாறு உண்மைக்கு நெருக்கமானது என்றால் நிச்சயமாக குரு போற்றப்பட வேண்டியவர் தான். “சுயசாதி பெருமை பிற சாதி நட்பு” என்ற கோட்டை படம் தாண்டவில்லை. குறிப்பாக மற்ற சாதிகளை இழிவுப்படுத்தவில்லை..அந்த வகையில் இயக்குநரைப் பாராட்டியே ஆகவேண்டும். மக்கள் செல்வாக்கு, வீரம், அதிகாரப்பின்னணி இருந்தும் குரு என்பவர் பணம் பின்னால் செல்லவில்லை என்பது ஆச்சர்யம். படம் ஒரு கோர்வையாகச் செல்லாமல், துண்டு துண்டாக நகர்வதால் சில இடங்களில் டாகுமெண்டரி Feel வருவதைத் தவிர்க்க இயலவில்லை. “நாலு பேர் என்னை அடித்தார்கள்” என்று சொல்பவர் மேல் நமக்கு எமோஷ்னல் வரும். “நாலு பேரை நான் அடித்தேன்” என்பவர் மேல் நமக்கு என்ன உணர்வு வருமோ.. அந்த உணர்வு தான் படம் மீதும் வந்தது. ஒரு அம்மா கேரக்டர் தன் மகனை, பழிக்குப் பழியாக கொலைச் செய்யச்சொல்லி வளர்ப்பதை நிச்சயமாக வீரக்கணக்கில் எழுத முடியாது. இப்படியான சில சமூக ஆபத்தும் படத்தில் இருக்கிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களோடு ஒன்றாக இருப்பதை பெரிதாகப் பேசிக்கொள்வது சமுத்துவத்திற்கு அழகு சேர்ப்பது அல்ல. இன்னும் சற்று ஆழமாக கிரவுண்ட் வொர்க் செய்திருந்தால் நம் மனதை ஆண்டிருப்பார் இந்த மாவீரா
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *