வரலாற்றில் கொஞ்சமாக கதை இருக்கலாம். ஆனால் கதை மொத்தமும் வரலாறாக இருந்துவிடக்கூடாது. சின்னதாக அப்படியொரு பதட்ட எண்ணத்தை தந்தது நீளிரா. ஆனால் போர் குறித்த எளியவர்களின் மனநிலையை பிரதிபலித்த இப்படத்தை நாம் பார்த்தே ஆகவேண்டும்
இலங்கையிலுள்ள விடுதலை இயக்கத்தை சிதைக்க, இந்திய அரசு அமைதிப்படையை அங்கு அனுப்பியது. அந்த அமைதிப்படை ஒருபுறம், விடுதலை இயக்கம் ஒரு புறம், சிங்கள படை ஒருபுறம் என தத்தம் தங்கள் நியாயங்களில் நிற்கிறார்கள். இச்சூழலில் அங்கு, ஒரு எளிய குடும்பத்தின் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. ஒரு இரவுக்குள் இந்த திருமணம் எந்தச்சுழலில் சிக்கியது… இல்லை எப்படி தப்பியது? என்பதே நீளிரா படத்தின் கதை. (நீளிரா என்றால் நீண்ட இரவு என பொருள்)
இந்திய அமைதிப்படை பிரிவின் தலைமைப்பாத்திரத்தில் நவீன் சந்திரா. நல்லவராக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். போராளி இனக்குழுவின் அங்கமாக சனந்த் இவரின் நடிப்பும் நல்ல மைலேஜ். மேலும் கபிலவேணு, ரூபா கொடுவாயூர், விது, சித்து குமரேசன், நவயுகா, ஸ்வாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிபிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் உள்பட யாவரும் நல்ல நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்
செல்வரத்தினம் பிரதீபனின் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. 1980 காலகட்டத்திற்கான லைட்டிங்-ஐ செட் செய்து உண்மைக்கு நெருக்கமான விஷுவலை கொடுத்துள்ளார். கே தனது நல்லிசையால் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். 1.30 மணி நேரத்தில் படத்தை ஷார்ப்பாக கட் செய்துள்ளார் எடிட்டர் ராதா ஸ்ரீதர்.
இயக்குநர் சோமிதரன் ஒரு சென்ஸிட்டிவான கதையை மிகவும் கவனத்தோடு கையாண்டுள்ளார். உண்மையைச்சொல்ல முயற்சித்ததில் சில போதாமைகள் இருந்தாலும், ஒரு போருக்குப்பின்னால் இருக்கும் எளிய குடும்பங்களின் வலியை, எதிர்பார்ப்பை சொன்னதில் உயர்ந்து நிற்கிறார் சோமிதரன். நிச்சயமாக நாம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டிய படம் நீளிரா
3.25/5
-வெண்பா தமிழ்

