ஒரு தொழில் சார்ந்த காட்டுப்பயணத்தில் நிகழும் அமானுஷ்யங்கள் தான் நறுவி
படத்தின் துவக்கத்தில் குன்னூர் மலையில் வாழும் மக்களில் ஒரு குடும்பத்தில் ஒரு திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பின் சென்னையில் காபி பவுடர் பிஸ்னெஸ் செய்யும் நிறுவனம் காட்டப்படுகிறது. அந்த நிறுவனத்திலுள்ள டீம் ஒன்று குன்னூர் வருகிறது. இரு பெண்கள் இரு ஆண்கள் கொண்ட அந்த டீமின் பயணமும் பயணத்தின் முடிவும் தான் படத்தின் கதை
படத்தில் VJ.பப்பு ஜீவா ரவி என சில முகங்கள் தவிர்த்து அனைவரும் புதுமுகங்கள் தான். யாருமே குறை சொல்ல முடியாதளவில் நடித்துள்ளனர். ஹரிஸ் அலக், வின்ஷு, பாடினி குமார், ப்ரவீனா, கதே, முருகானந்தம், ப்ரதீப், மதன் S ராஜா , சரதா நந்தகோபால் உள்பட சிறுசிறு கேரக்டர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குன்னூர் ஆட்களாக நடித்துள்ள இரு பெண் கேரக்டர்கள் காமெடி செய்ய முயற்சித்துள்ளனர். தீரன் என்ற கேரக்டரின் பங்களிப்பு கதைக்கு முக்கியமானது
படத்தில் ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன் மட்டுமே தனித்துத் தெரிகிறார். குன்னூரின் அழகை மொத்தமாக தன் கேமராவிற்குள் கொண்டு வந்துள்ளார். இசை அமைப்பாளர் அஷ்வந்த் இன்னும் இதமான பாடல்களை தந்திருக்கலாம்..வாய்ப்பிருந்தும் மிஸ் செய்துவிட்டார். பின்னணி இசை பரவாயில்லை
படத்தின் நோக்கம் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது. என்றாலும் திரைக்கதை எளிய ரசிகனை சற்று குழப்பவே செய்கிறது. இந்தப்படம் காதல் படமா? பேய்படமா? திரில்லர் படமா? என்ற தெளிவின்றி பயணிக்கிறது திரைக்கதை. இவையெல்லாம் முன்பாதியில் தான். பின்பாதி படம் நேர்த்தியாகவே செல்கிறது. படத்தில் பல இடங்களில் கல்வியின் அவசியத்தைக் குறிப்பிடுகிறார் இயக்குநர் சுபாரக் முபாரக். அவரின் இந்த ஒரு விசயத்திற்காக மட்டும் படத்தைப் பாராட்டலாம் பார்க்கவும் செய்யலாம்
-வெண்பா தமிழ்
3/5

