வடசென்னை வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ்’ !

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில்
“ஆல் பாஸ் ” (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார்.

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார்.

‘ நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும்
மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

‘ பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,

” இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த கதை கொண்டது.
வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் அன்பு, பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள். ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு சோதனை வைக்கிறது. அது என்ன சோதனை?அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.

குடும்ப உணர்வுகளை சினிமாவில் சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த ‘ஆல் பாஸ்’ படமும் இருக்கும் “என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் மைதீன்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களிடம் கவனம் பெற்று, பார்வைகளை அள்ளி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *