பத்தா காலம் கடந்தும் நிற்கும்- அட்லீ

சத்யபாமா கல்லூரியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய்சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது,

“முதலில் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த அனைவரிடமும் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக்கொள்கிறேன். ‘பத்தா’ எனக்கு ஒரு படம் மட்டுமல்ல. காலம் கடந்தும் நம்மை யோசிக்க வைக்கும் சில படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்பாக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மனிதநேயத்தோடு ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும். அதே நேரத்தில் இது முற்றிலும் ஒரு புதிய விதமான மாஸ் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். இந்தப் படத்தை தயாரித்து, அஜித் சார் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வழங்கியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. முராத் கெதானி சார் எனக்கு குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். அவருக்கும் ஜியோ ஸ்டுடியோஸ் குழுவினருக்கும் நன்றி.”

“பாலாஜி தரணீதரன் போன்ற இயக்குநரை உலக சினிமாவிலேயே தேடினாலும் கண்டுபிடிப்பது கடினம். நம்ம ஊரில் இருக்கும் திறமைகளை நாமே கொண்டாடாமல், வெளியுலகத்தை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறோம். ஆனால் பாலாஜி போன்ற இயக்குநர்கள் நம்முடைய சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. சாய் அபயங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ஒரு நாளைக்கு ஒரு பாடலை உருவாக்கிவிட்டு அதனுடன் தூங்குவேன் என்று சொன்னார். அவரிடம் இருந்த அந்த ஆர்வத்தைப் பார்த்துதான் அவருடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், அனிருத் என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு தனித்துவமான இசையமைப்பாளர் இருப்பதைப் போல, சாய் அபயங்கருக்கும் தனியான ஒரு காலகட்டம் உருவாகும் என்று நான் நம்புகிறேன். சாய், உன்னிடம் இருக்கும் பணிவை எப்போதும் காப்பாற்றிக்கொள். நீ மிகப்பெரிய உயரத்துக்குச் செல்ல வேண்டும்.”

“லிஜோமோல் ஒரு அற்புதமான நடிகை. அவரை இந்தப் படத்தில் பார்த்தபோது, இவ்வளவு திறமையான நடிகையை நாம் இதற்கு முன்பு பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற உணர்வு வந்தது. நீ ஒரு மிகச்சிறந்த நடிகை. உனக்கு இன்னும் மிகப்பெரிய வாய்ப்புகள் வர வேண்டும். கலையும் செல்வாவும் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். கலை மீது எனக்கு எப்போதுமே மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. செல்வா என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பயணித்தவர். நம்முடன் இருப்பவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டால், நம்மையும் வாழ்க்கை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் என்று என் அம்மா சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் நான் தேர்ந்தெடுத்தவர்களில் செல்வாவும் ஒருவர். முத்துராஜ் அண்ணா, கார்த்திக் நேதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.”

“அர்ஜுன் சிதம்பரம், இந்தப் படத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையை இந்தத் துறை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். இன்னும் பெரிய விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். ஹரிஷ், உங்களுடைய நடிப்பையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ‘பத்தா’ மூலம் என்னுடைய அப்பாவைத் திரையில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு எனக்கு கிடைத்தது. காலத்துக்கும் உங்களை நான் நினைவில் வைத்திருப்பேன். அனைவரும் இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறீர்கள். ‘பத்தா’ ஒரு சிறப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். தயவுசெய்து திரையரங்குகளில் சென்று பாருங்கள். படத்தின் இறுதியில் உங்களுக்குள் ஒரு உணர்வை விட்டுச் செல்லும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ‘பாலாஜி அண்ணா அடுத்ததாக எப்போது இப்படியொரு படத்தைக் கொடுப்பார்?’ என்று நீங்கள் கேட்கும் அளவுக்கு படம் இருக்கும் என்று நம்புகிறேன்..”

“நான் இன்று இந்த அளவுக்கு வளர்ந்து, இந்த மேடையில் நிற்பதற்கு விஜய் அண்ணாதான் மிக முக்கியமான காரணம். இதை நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார்; இனிமேல் எனக்கு இன்னொரு படம் கொடுக்க முடியாது. ஆனால் நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு வருவதற்கும், என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்புகளைத் தொடர்ந்து கொடுத்து என்னை வளர்த்ததற்கும் அவர் முக்கிய காரணம் என்பதை என்னால் மறுக்கவே முடியாது. சமூக வலைதளங்களில் பல நேரங்களில் தவறான விஷயங்கள், எதிர்மறையான கருத்துகள் வரலாம். ஆனால் அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. விஜய் அண்ணா எப்போதும் சொல்வதைப் போல, எதிர்மறையான விஷயங்களை உதாசீனப்படுத்திவிட்டு, நம்முடைய இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம்மைச் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். அதனால் யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், நம்முடைய பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும்”, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *