உணர்ச்சிக் குளத்துல கல்லக் கொண்டு எறிஞ்சிட்டா அங்குன தேங்கி கிடக்க கண்ணீர் துளிவ பூராம் ஒன்னுக்கொன்னு பேசிக்கிடும். அப்படிப் பேசும் போது மனசை லேசா ஆசாப்ளேடை வச்சி சுரண்டுன மாதியும், அதே இடத்தில சப்பாத்திக் கள்ளிப் பூவ வச்சி தடவுன மாதியும் இருக்கும்..
இந்த ரெயினிஸ் ஐயர் தெருவில வசிக்கிற டாரதியோட மனசை படிக்கும் போது சப்பாத்திக்கள்ளி பூவு வருடுன மாதி இருக்கும்
இருதயத்து டீச்சர் சேசய்யாவோட அன்னாட நகர்வைப் படிக்கையில ஆசாப்ளேடு தார வலி
பொங்கி நிக்க எல்லா ஆசையையும் நடுவீட்டுக்குள்ள துணி இல்லாம நின்னு குளிச்சே தீத்துப் போடுத அன்னமேரி டீச்சர்..
வாழ்க்கையை காவு கொடுத்துட்டதா நினைக்கிற அன்னமேரி டீச்சரோட மவன் தியோடருக்குள்ள ஆண்டவர் அப்படித்தாம் இளகி நிக்காரு. பூழை நாத்தமும், மூத்திர வீச்சமும் அடிச்சாலும் ரெபாக்காளுக்கும், அவர் புருசனுக்கும் போய் ஒதவுதான் தியோடர்
எஸ்தர் சித்தி, தான் அண்ணனோட தப்பா நடக்கதைப் பாத்துக்கிட்டப் பிறவும் கூட டாரதி என்ற சிறுமிக்கு அவங்க மேல கோவம் வராத மனம் வாய்ச்சிருக்கு
ஒரு நாட்டுக்கதையோ, ஒரு ஊர்க்கதையோ, அதையெல்லாம் விட ஒரு தெருக்கதைக்குள்ளே எத்தனை விசித்திரம் இருக்கு பாருங்கய்யா என மொழியில் தேன் தடவி அள்ளி எறிஞ்சிருக்கார் வண்ண நிலவன்
நாவலில் நெஞ்சுக்கூட்டை உடைச்சிப் போடுற இடம் ஒன்னுண்டு. ஆசீர்வாதம் பிள்ளைக்கும், ரேபாக்காளுக்கும் பிறக்குற பிள்ளை அலீஸோட தொடக்கமும் அடக்கமும் வார இடம் அது..
எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை. எல்லாம் சேர்ந்தவன் தான் மனுசன். நமக்குள்ள சாம்ஸனுக்குள்ள பொருந்தாக் காமமும் கிடக்கு, டாரதியோட கருணையும் உண்டு, தியோடர்ட உள்ள பெருங்கருணையும், பெருங்குடியும் உண்டு, அன்னமேரி டீச்சர் மாதி சகிப்புத்தன்மையும், இருதயத்து டீச்சர் மாதி பொங்கி வழியுற அன்பும், ரேபாக்கள் மாதிரி துறவு மனநிலையும் நம்மட்ட உண்டு தாம். எந்த அளவை கூட்டணும், குறைக்கணும்னு நாம டிசைட் பண்ணணும்
மழை தான் இந்தத் தெருவுல முக்கிய ரோல்ப்ளே பண்ணும். அந்த ரெயினிஸ் ஐயர் தெரு மழையை அனுபவிக்கணும்னா இந்த நூலை வாசிக்கணும்❤️

