தாலிமேல சத்தியம் – நூல் விமர்சனம்

பெயர்ல இருக்கிற உசரம் இவர் எழுத்துலயும் உண்டு. என்கதெ, கோவேறு கழுதைகள், இப்போது உயிரோடிருக்கிறேன், பெத்தவன், இப்ப இந்த நூல் என இமயம் ஒருநாளும் என்னை ஏமாற்றவில்லை…இதுவும் மாஸ்டர் பீஸ் தான்

காணாமல் போனவர்கள்னு ஒரு கதை

தவப்பனைக் காணலன்னு கடலூர்க்கு வாரான் மகன். போலீஸ் ஒரு கல்யாண மண்டபத்துக்கு வரச்சொல்லிருக்கு. அந்த மண்டபத்துல ஏகப்பட்ட கூட்டம். எல்லாரும் காணாமல் போன சொந்தங்களை தேடி வந்த ஜனங்க. போலீஸ்காரங்க திரைகட்டி சில கண்டுபிடிச்ச ஆட்களை காட்டி இதுல யாராவது உங்க வீட்டாள்க்க உண்டான்னு பார்க்கச் சொல்லுது. நிறைய ஏமாற்றம். இதுக்கு முன்னாடி தவப்பனை தேடி வந்தவன் பக்கத்தில இருக்க ஒருத்தர்ட அவர் யாரைத் தேடி வந்தார்னு கேட்பான். அவர் தான் தாய் காணாமல் போன கதையைச் சொல்வாரு.. “அட பாய்மட்ட மக்கா, பெத்தவளை ரெயில் ஏத்திவிட்டு தொலைக்க உங்களுக்கு எப்படிடா மனசு வந்துச்சு?”ன்னு கொஞ்ச நேரம் கண்ண கசக்கிட்டேன். நெஞ்சைப் புரட்டியெடுத்த கதை

தாலிமேல சத்தியம்னு வர்ற கதையோட அடர்த்தியும் ஆழமும் சமகால அரசியலையும், ஓட்டுக்கு காசு வாங்கிட்டு அதுக்குப் பின்னால உள்ள சமூக அழுக்கையும் வெளிச்சம் போட்ட கதை

பள்ளியோடம் படிக்கப் பயலை வாத்தியாரு நூதனமா சாவடிச்சுப் போட்டான். நியாயம் கேக்க போலீஸுக்குப் போறா பெத்தவா. அங்க பணமும் அதிகாரமும் சேந்து அவளை மண்டயக் கழுவி அனுப்புற சமூக எதார்த்தம் செவிளுலே அறைஞ்சிது..இமையத்தோட எழுத்து நடையை எனக்கு எங்கூர் மொழியோட ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடியிது. அது என்னை இன்னும் அவர் கதைகளோட நெருக்கமாக்குது

சாரதா கதைலாம், எனக்கு 55 வைசு ஆனபிறவு நானே நான் நேசிச்சவளோட ரெயில் கூட்டத்துல நின்னு பேசிக்கிட்டிருக்க மாதி மனசைப் போட்டு உருட்டிச்சிது

50 வைசு பொண்டாட்டியை 55 வைசு புருஷன் லேசா ஆசையா பேசி முதுவுல ரெண்டு தட்டு தட்டுதான். இன்னைக்கு எதுவும் விசேசமா நடக்கும் போலன்னு அவா லைட்டா நினைக்கா.. ஆனா புருசன் வந்ததும் குறட்டை விட்டு தூங்கிருதான். அவா மனசு கொஞ்சம் நேரம் அனத்துற அனத்து இருக்கே…அடேயப்பா அது அக்கினியோட பெரிய அனலாக்கும். இன்னைக்குள்ள பிள்ளிய பொருளாதாரம், கல்வியறிவு, சமூகமாற்றம் இதெல்லாம் வச்சு புருசன்ட ஈசியா இன்னொரு ரவுண்ட் போவமா? என்ன சீக்கிரம் முடிச்சிட்ட? ன்னு செக்ஸை கேட்டு வாங்குதுங்க.. நிச்சயமாக இந்த தலைமுறைக்கு நிறைய குடுப்பனை இருக்கு. “நான்லாம் கீழ பாத்ததே கிடையாது..சவத்த அதை எவம்ல பாப்பான்”னு சொன்ன பெருசங்கல்லாம் எனக்குத் தெரியும். ரவநேரம் என்ற கதை இப்படி நிறைய யோசிச்சு ரசிக்க வச்சுது

சுடுகாட்டுல பொணக்குழி வெட்டுத பொம்பளையும், சித்தாள் வேலைக்குப் போற பொம்பளையும் தங்களோட வாழ்க்கப்பாட்டைச் சொல்ற, “மயானத்தில் பயமில்லை” என்ற கதையில் சில காட்சிவ இருக்கு..அதை அமீர் மாதிரி, வெற்றிமாறன் மாதிரி ஆள்க்க படமா எடுத்தா ஒரு உலகசினிமா ரெடி

மொத்தம் பத்து கதைக இருக்கு. அத்தனையும் முத்து தான் ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *