முதல் ஆச்சர்யம் இயக்குநர் சற்குணத்திடமிருந்து இப்படியொரு வெப்சீரிஸ் வந்திருப்பது!
குருப் தேர்வுகளின் ஊழலை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு முக்கியமான பதிவாக இந்த வெப்சீரிஸைப் பார்க்க வேண்டியதிருக்கிறது
ஹீரோயின் துஷாரா விஜயன் சீரிஸின் ஆரம்பத்தில் டி.எஸ்.பி அதீதிபாலனை கடத்துகிறார். அதன்பின் அதீதியின் டி.எஸ்.பி போஸ்டிங்கில் துஷாராவே வலம் வருகிறார். ஆள்மாறட்டத்தை யாரும் கண்டுகொள்ளாதபடி தெளிவாகச் செய்கிறார் துஷாரா. அதற்கான காரணம் என்ன என்பதும், துஷாராவின் இலக்கு வெற்றியடைந்ததா என்பதும் எக்ஸாம் சீரிஸின் மீதிக்கதை
துஷாரா விஜயன் டி.எஸ்பி வேடத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவருக்கான பின்கதையில் வரும் உருக்கமான காட்சிகளில் நம் மனதிற்கு நெருக்கமாக நடித்துள்ளார். அதீதிபாலன் அசால்டாக பல இடங்களில் ஸ்கோர் செய்து அசத்தியுள்ளார். சர்ப்ரைஸ் கொடுத்த நட்சத்திரம் அப்பாஸ் தான்! நல்லதொரு கேரக்டரை சற்குணம் அவருக்கு வழங்கியுள்ளார். கேரக்டரின் தன்மையுணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் அப்பாஸ். ஏனைய கேரக்டர்களின் காஸ்டிங் அவர்களின் ஆக்டிங் சிறப்பு
ஒளிப்பதிவாளர் சீரிஸின் இன்னொரு முக்கிய கேரக்டராக பயணப்பட்டுள்ளார். மலைச்சரிவுகளை காட்சியப்படுத்திய விதம் ஆகச்சிறப்பு! சாம்.சி.எஸ் தனது பின்னணி இசையில் சத்தத்தைக் குறைத்துள்ளார். அநேகமாக இதுதான் முதல்முறை சத்தகுறைப்பு என எண்ணுகிறோம்.
முதல் இரு எபிசோடில் கதை மெல்ல நகர்ந்தாலும், போகப்போக முக்கிய குற்றவாளி யார் என்ற பயணத்தில் சீரிஸின் வேகம் கூடுகிறது. TNPC எக்ஸாமில் நடைபெறும் முறைகேடு என்பது எளிய பிள்ளைகளின் கனவுகளை குழிதோண்டி புதைப்பது போன்றதாகும். அதுபோல சமூகத்திற்கும் அது பெருந்தீங்கை விளைவிக்கும் என்பதை அக்கறையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்! சீரிஸின் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு எழும் ஒரு முக்கியமான லாஜிக் கேள்விக்கு இயக்குநர் விடையளிக்கவில்லை என்பது மட்டும் ஏமாற்றம். மற்றபடி தமிழில் வெளியான சீரிஸில் எக்ஸாம் நல்ல மார்க்கில் பாஸாகியுள்ளது
3.25/5
-வெண்பா தமிழ்
