சுயநல அரசியல்வாதி மற்றும் காவல் அதிகாரி இருவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் படும்பாடு தான் இந்த அனந்தன் காடு
படத்தின் ஆரம்பத்தில் சுனிலை கன் பாயிண்டில் நிறுத்தி ஒரு கதை சொல்கிறார் ஒரு இளைஞர். அந்தக்கதைப்படி 1989-ல் இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்த இளைஞன் ஆர்யா கேரளா (தமிழ்நாடுன்னும் வச்சிக்கலாம்) வருகிறார். அவர் வந்து அங்கு அரசியல்வாதி ஒருவருக்காக கொலைகள் செய்யும் குட்டி கூலிப்படை ஒன்றோடு இணைகிறார். அந்தக்கூலிப்படைக்கு அரசியல்வாதி இன்னொரு அசைன்மெண்ட்-ஐ கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். அதன்பின் அந்த அரசியல்வாதி ஆர்யா உள்ளிட்டோரையே கொலை செய்ய திட்டம் தீட்ட அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை
நாயகனாக ஆர்யா இருந்தாலும் மலையாள நடிகர்கள் பலரும் நாயகர்களாக வருகிறார்கள். சண்டைக்காட்சிகளில் ஆர்யாவின் துடிப்புமிக்க உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. எமோஷ்னல் காட்சிகளில் வழக்கம் போல திணறுகிறார். சுனில் மிரட்டியுள்ளார். சில கொடூரங்களை படத்தில் அவர் நிகழ்த்தும் போது நமக்கே பதறுகிறது. ரெஜினா கஜண்ட்ரா, அக்சயகுமார், முரளி கோபி, தேவ்மோஹன், இந்திரன்ஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பிற நடிகர்கள் அனைவரும் அசத்தியுள்ளனர்
அஜனீஷ் லோக்நாத் பாடல்களிலும் பின்னணி இசையிலும் சிறப்பு கவனம் செலுத்தி உழைத்துள்ளார். யுவாவின் ஒளிப்பதிவுக்கு தனியாக ஒரு பாராட்டுப்பத்திரமே வாசிக்கலாம். இரவு ஷாட்ஸ் முதல் சண்டைக்காட்சிகள் வரை அவரது கேமரா அபாரம். எடிட்டர் ரோஹித் வி.எஸ். வாரியத் சிறப்பாக கட்ஸ் கொடுத்துள்ளார்
உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார் முரளி கோபி. கதையில் சில லாஜிக் மீறல் இருந்தாலும், திரைக்கதையில் அதைச் சரி செய்திருக்கலாம். சின்னதாக ஒரு குழப்பத்தை திரைக்கதை ஏற்படுத்துகிறது. இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமாரின் மேக்கிங் அற்புதமாக அமைந்துள்ளது. முதல்வரை ஐந்துபேர் கொண்ட கடத்தல் குழு தனியாக ஒரு இடத்திற்கு வரச்சொல்லி டிமாண்ட் செய்வதெல்லாம் எந்த ஊர் லாஜிக் சாரே? இப்படி நிறைய லாஜிக் கொஸ்டின்ஸ் இருந்தாலும், படம் எங்குமே தேங்கி நிற்கவில்லை. ஒரு விறுவிறு படம் பார்க்க விரும்புபவர்கள் லாஜிக் மறந்து அனந்தன் காட்டிற்குச் செல்லலாம்
3/5
-வெண்பா தமிழ்

