ஏமாந்த நிலையிலுள்ள நால்வர் ஏமாற்றும் நிலைக்குள் செல்வதே இந்த கான்சிட்டி
ஓப்பன் பண்ணா கர்நாடக மாநிலத்தில் கணவன் அர்ஜுன் தாஸ், மனைவி அன்னாபென், அண்ணன் யோகிபாபு, அம்மா வடிவக்கரசி அர்ஜுன் தாஸ் அன்னாபென் ஜோடியின் மகன் அகிலன் ஐவரும் ஹோட்டல் நடத்தி வாழ்ந்து வருகிறார்கள். டைட்டில் கார்ட் முடிவதற்குள் இவர்கள் வாழ்வு காட்டப்பட டைட்டில் கார்டிற்குப் பின் அர்ஜுன் தாஸ் மகன் அகிலன் கடத்தப்படுகிறான். பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விசாரணையில் தான் இவர்களின் உண்மையான பின்னணி தெரியவருகிறது. இந்த ஐவரும் ஒரு குடும்பமே இல்லை என்பதும், ஐவரும் போலீஸ் ஸ்டேசனிலிருந்து தப்பித்து வந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. அதன்பின் இவர்களின் கடந்த காலம் என்ன? என்ற கேள்விக்கும் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்கும் மீதிப்படம் பதில் சொல்கிறது
ஹீரோவாக அர்ஜுன் தாஸ் பிரமாதமாக நடித்துள்ளார். படத்தின் இயல்பிலே அவருக்கு மாஸ் காட்டும் காட்சிகள் அமைந்துள்ளன. அதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். மலையாள நடிகை அன்னாபென் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகிபாபு காமெடியில் கலக்கியுள்ளார் என்றால் எமோஷ்னல் காட்சிகளில் அசத்தியுள்ளார். வில்லன் வேடமேற்ற நந்தகோபால் மிரட்டியிருக்கிறார். ஆச்சர்யப்படுத்திய நடிகை வடிவக்கரசி தான். அவருக்குள் இப்படியொரு டைமிங்சென்ஸ் கேரக்டர் இருப்பதை இப்படம் மூலம் அறிய முடிந்தது. விடிவி கணேஷ் கிடைத்த எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்துள்ளார். அருள்தாஸ், ரமேஷ்திலக், சிறுவன் ஆதவன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன் உள்ளிட்ட இன்னும் பலர் கச்சிதமாக பங்களித்துள்ளனர்
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் நல்ல எனர்ஜி. ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மிக இன்ட்ரெஸ்டிங்கான ஒன்லைனை கையிலெடுத்துள்ளார். திரைக்கதையிலும் நல்ல விறுவிறுப்பு அமைந்துள்ளது. படம் நெடுக லாஜிக் கேள்விகள் நம்மைத் துளைத்தாலும், காட்சிகளிலுள்ள எனர்ஜி நம்மை என்கேஜாக வைத்திருக்கிறது. படத்தை ஒரு நல்ல மோட்டிவ் கொண்டு முடித்திருக்கலாம். இருப்பினும் ஒரு க்ளாஸ் என்டெர்டெய்ன்மெண்ட் கியாரண்டி என்பதால் கான்சிட்டிக்குள் செல்லலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

