30 வருடங்களுக்கு முன்பு சில குசும்பு பிடித்த பெரியவர்கள் எட்டு வயது சிறுவனிடம் “ஏ ஒன் அம்மா கல்யாணத்தன்னைக்கு நீ என்ன பண்ண?” என்று கேட்பார்கள். விபரமறியாத சிறுவனும், “எஙகம்மா கல்யாணத்தன்னைக்கு பந்தி பரிமாறினேன்” என்பான். அதாவது ஒரு சிறுவனால் தன் அம்மாவின் திருமணத்தை காணவே முடியாது என்றிருந்த காலம் அது. அந்தக் காலத்தில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் பெற்றோர்க்கு மறுமணம் என்பதே கிடையாது. குறிப்பாக பெண்களுக்கு கிடையவே கிடையாது. பெண்களின் அடிமனதிற்குள் விருப்பமிருந்தாலும், அதை அவர்களால் கூட வெளிப்படுத்த முடியாத அவலமான சமூகச்சூழல் இருந்தது. இப்போதும் கூட இருக்கிறது.
இந்தக் கொடுமையான சமூக அவலத்தை படமாக எடுத்த இயக்குநர் சசிக்கு பாராட்டுக்கள். மேலும் இதுவொரு உண்மைச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது
இரு பையன்களை கஷ்டப்பட்டு ஆளாக்கும் விதவையான ஸ்வாசிகாவிற்கு “நாம் ஒரு மறுமணம் முடித்தால் என்ன” என்ற ஆசை எழுகிறது. முதலில் முதலாமாண்டு கல்லூரி படிக்கும் தன் மகன் அஜயிடம் தெரிவிக்கிறார். மகன் பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்க அவர் அதிர்ந்து போகிறார். பின் நான்காண்டுகள் கழித்து மனம் மாறும் மகன் தன் அம்மாவிற்கு மறுமணம் செய்துவைக்க முயற்சிக்கிறான். இளையமகனும் அதற்கு ஒத்திசைகிறான். ஆனால் சுற்றமும் சொந்தமும் அதை எதிர்க்கிறது. எதிர்ப்பை மீறி இரு இளைஞர்கள் தங்கள் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்தார்களா என்பதே படத்தின் மீதி திரைக்கதை
இந்த வருடம் சிறந்த நடிகைக்கான தேசியவிருதை இப்போதே ஸ்வாசிகாவிற்கு எழுதி வைத்துவிடலாம். அந்தளவிற்கு நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். விஜய் ஆண்டனியின் கெஸ்ட் அப்பிரியன்ஸ் ஓரளவு நல்லபலனை தந்துள்ளது. அஜய் இன்னுமே ஆழமான நடிப்பைக் கொடுத்திருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. பாலாஜி சக்திவேல் அமர்க்களமாக நடித்துள்ளார். கருணாஸ் உள்ளிட்ட பிற கேரக்டர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர்
பாலாஜி ஸ்ரீராமின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலத்தைக் கொடுத்துள்ளது. ஒளிப்பதிவாளர் தர்ஷன் தரமான விஷுவலை கொடுத்துள்ளார்
கதையின் ஆழத்தை உணர்ந்து இயக்குநர் சசி ஓவர் கமர்சியல்னெஸை படத்தில் சேர்க்கவில்லை. முடிந்தளவில் எதார்த்தத்தை தவறவிடாமல் கையாண்டுள்ளார். முன்பாதியில் சிற்சில காட்சிகளை தவிர எல்லாக் காட்சிகளும் அழுத்தமாகவே அமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் எமோஷ்னல் ஷிப்டிங் ரைட்டிங் லெவலில் இருந்தாலும்,கடைசி 20 நிமிட படம் Full satisfied-ஐ கொடுக்கிறது
விதவை மறுமணம் என்பது பெண்களின் உரிமை மட்டுமல்லது. அதைச் செய்து வைக்க வேண்டியது ஆண்களின் கடமையும் கூட” என்பதை அற்புதமாகச் சொன்ன இயக்குநர் சசிக்காக நாம் நூறுசாமியை வேண்டலாம்
4/5
-வெண்பா தமிழ்

