உயிரற்ற பொம்மைக்கும் உயிருள்ள உண்மைக்கும் நடக்கும் ஒரு உணர்ச்சிக்கதையை மனதுக்கு நெருக்கமாக சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர் அரவிந்த் ராஜ்.
நாயகன் பப்புவிற்கு நாயகி அனுபமா மீது பெருங்காதல். ஆனால் அனுபமாவிற்கு காதல் மற்றும் கல்யாணம் மீது நம்பிக்கையில்லை. இருந்தும் சூழல் அவர்களை திருமணம் செய்ய வைக்கிறது. ஆறுமாதத்திற்குப் பின் பிரிந்துவிடலாம் என்ற டீலோடு தான் இந்தத் திருமணம் நடக்கிறது. பப்புவிற்கு எப்படியும் அனுபமாவை ஆறுமாதத்திற்குள் காதலுக்குள் கொண்டுவந்திடலாம் என்ற நம்பிக்கை பலமாக இருக்கிறது. ஆனால் நடப்பது வேறொன்று. மேலும் பொம்மை வைத்து ஒரு எமோஷ்னல் ஏரியாவும் படத்திலுண்டு
சின்னத்திரையில் பார்த்த விஜே பப்பு நல்ல மெச்சூடான நடிப்பையே கொடுத்துள்ளார். காமெடி காட்சிகள் காதல் காட்சிகள் கூடவே சில எமோஷ்னல் காட்சிகளும் அவருக்கு வாய்த்திருக்கிறது. சமாளித்துள்ளார். நாயகி அனுபமா பார்ப்பதற்கு அழகான டால் போலவே இருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தினால் நிச்சயம் கவனம் பெரும் நாயகியாக வலம் வருவார். இவர்கள் இருவர் மட்டுமே பிரதான கேரக்டர்கள் என்பதால் மற்றவர்களுக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை. பப்புவின் அம்மாவாக வருபவர் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்
பாசில் இசையில் நல்ல மைலேஜை கொடுத்துள்ளார். ஒரு சோகபாடல் தரமாக அமைந்துள்ளது. கேமராமேன் பாலாஜி சேகர் தனக்கு வழங்கப்பட்ட பட்ஜெட்டில் முடிந்தளவு நல்ல ஷாட்களை வைத்துள்ளார். பின்பாதியில் படம் வீட்டுக்குள்ளே நடக்கிறது. கடுமையாக போராடி போராடிக்காமல் ஷாட் கம்போஸ் செய்ய முயற்சித்துள்ளார்
ரொம்பவும் சிறியகதை என்பதால் இதை இரண்டு மணிநேர படமாக எடுப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் இயக்குநர் அரவிந்த் ராஜ். மிகமிக குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், ஒரு கமர்சியல் சினிமாவாக நமக்குள் படம் கனெக்ட் ஆகவில்லை. ஹீரோ ஹீரோயின் மீது உருகி உருகி லவ் பண்ணுவதற்கான ஸ்ட்ராங் ரீசன் எதுவுமேயில்லை. காதல் காரணமற்றது என்றாலும், திரைப்படமாக பார்க்கும் போது லாஜிக் வேண்டும் தானே?!
பின்பாதி காட்சி அமைப்புகளிலும் லாஜிக் கேள்விகள் கொட்டிக்கிடக்கின்றன
இப்படியான சிற்சில குறைகள் இருந்தாலும், பல சிறப்பான மொமெண்ட்ஸும், சில சர்ப்ரைஸும் படத்தில் இருக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸில் நல்ல எமோஷ்னலை தந்து படத்தை லைக் செய்ய வைத்துள்ளார் இயக்குநர்.
3/5
-வெண்பா தமிழ்

