திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஹோய்சாள ஆட்சியை நிறுவி வாழ்ந்தவர் வல்லாள மகாராஜா. அவரின் வாழ்க்கை வரலாற்றை புனைவு கலந்து படமாக்கியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி.
வல்லாள மகாராஜாவாக வருகிறார் நட்டி. அவரின் ஆட்சியில் சுல்தான்கள் வந்து டார்ச்சர் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நட்டியின் மகனை கடத்திச் சென்று விடுகிறது சுல்தான் படை. நட்டியின் மகனை மீட்டு சுல்தான்கள் படைகளை வெல்லும் பொறுப்பை ஏற்கிறார் ஹீரோ ரிச்சர்ட். அவர் சுல்தான்களை வென்று ஹோய்சாள அரசரின் கட்டளையை நிறைவேற்றினாரா என்பதே கதை
கேரக்டருக்கான பொருத்தமான நடிப்பைக் கொண்டு வருவதற்கு மிகவும் உழைத்துள்ளார் ரிச்சர்ட். அவரின் உழைப்பு பாராட்டுக்குரியது. நட்டியின் குரல்மொழி உடல்மொழி இரண்டுமே அவரின் கேரக்டருக்கு பெரிதாக செட்டாகவில்லை. படத்தில் நடிப்பால் மிரட்டி பர்ஸ்ட் மார்க் மற்றும் பாஸ்மார்க் வாங்குபவர் நாயகி ரிச்சானா மட்டுமே. அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாகிறார். வில்லனாக வரும் சிராக் ஜானி நடிப்பு ஒகே ரகம்
ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர் போர்க்காட்சிகளை படமாக்க பெரிதாக சிரமப்பட்டுள்ளார். கிடைத்த பட்ஜெட்டில் சப்ஜெக்டை தொலைக்காமல் காட்சிகளை உருவாக்க முயற்சித்துள்ளார். ஜிப்ரானின் இசை படத்தின் மற்றொரு ஹீரோ. காட்சிகள் தராத எனர்ஜியை பின்னணி இசை தருகிறது.
வரலாற்றை புனைவாக்கலாம்..ஆனால் புனைவை வரலாறாக்கக் கூடாது. திரெளபதி2 பல இடங்களில் புனைவை வரலாறாக கட்டமைக்க முயன்றுள்ளது. ஒரு மத வழிபாட்டாளர்களை திருப்தி செய்வதற்காக பிற மத வழிபாட்டாளர்களை இகழ்தல் ஆகாது. நிறைய இடங்களில் இயக்குநர் அவற்றைத் தெரிந்தே செய்துள்ளார்
அறமாகவும் அரசியலாகவும் போதாமையோடு வந்திருக்கும் இப்படம், சினிமாவாகவும் ஏமாற்றத்தைத் தான் தந்துள்ளது. எந்தக் கேரக்டரும் படத்தில் கேரக்டர்களாக பிரதிபலிக்கவே இல்லை. எல்லாக் காட்சிகளிலும் நாடகத்தன்மை எட்டிப்பார்க்கிறது
ஒரு சாராரை மகிழ்விக்க எடுத்த இப்படம் ரசிக சாராருக்கு எதிராகவே அமைந்துள்ளது. நெக்ஸ்ட் டைம் மோகன் ஜி மாறுவார் என்று எதிர்பார்ப்போம்!
-வெண்பா தமிழ்

