மதுரையில் சேவல்கள் மட்டுமே மோதல் களத்தை காண்பதில்லை. ஆடுகளும் காண்கின்றன என்பதை கொம்புகள் தெறிக்க தெறிக்கப் பேசியுள்ளது இந்த ஜாக்கி
ஆட்டோ ஓட்டுநரான ஹீரோ யுவன் கிருஷ்ணா காளி என்ற பெயரில் மூர்க்கமான கிடா ஒன்றை வளர்க்கிறார். அந்தக் கிடாவை கிடாமுட்டு போட்டிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஆல்ரெடி ரிதான் கிருஷ்ணா தன் கிடாவை வைத்து தொடர்ச்சியாக வென்று வருகிறார். இப்போது அடுத்து என்ன என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். யெஸ் அதேதான். ஹீரோவின் கிடா வில்லனின் கிடாவைப் போட்டுத்தள்ள, வில்லன் கடுப்பாகி ஹீரோவை அட்டாக் பண்ண அது அடுத்தடுத்த லெவலுக்குச் செல்கிறது. முடிவு வேறலெவலில் இருந்ததா என்பதே கதை
யுவன் கிருஷ்ணா நல்ல அடையாளத்தைப் பெறும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட சின்ன வெளியில் தனது இருப்பை பதிவு செய்துள்ளார் அம்மு அபிராமி. அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். வில்லனாக நடித்துள்ள ரிதான் கிருஷ்ணாஸ் முதிர்ச்சியான நடிப்பிற்காக நிறைய பயிற்சி எடுத்துள்ளார் போல. அவரது முயற்சியும் பயிற்சியும் ஸ்கிரீனில் பேசுகிறது. மதுசூதனராவ், உள்ளிட்ட பிற கேரக்டர்களும் கவனம் ஈர்க்கின்றனர்
சக்தி பாலாஜி ஒரு வாழ்வியல் படத்திற்கு தேவையான எனர்ஜியை இசையில் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் N.S.உதயகுமார் தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார். ஷார்ப்பான எடிட்டிங்கால் N.B.ஸ்ரீகாந்த் கவர்கிறார்
இயக்குநர் ப்ரகபால் கதையாக புதிய ஐடியாவைப் பிடித்துள்ளார். மற்றபடி படம் சில இடங்களில் வெற்றிமாறனின் ஆடுகளத்தை நினைவூட்டுகிறது. ஓவர் வன்முறையும் நம்மை சின்னதாக கலங்க வைக்கிறது. சின்னச் சின்ன நுணுக்களோடு இந்தக் கதையை அணுகியிருந்தால் அட்டகாசமான ஒரு படம் கிடைத்திருக்கும். திரைக்கதை நடுரோட்டில் பஞ்சராகி நிற்காத வகையில் இந்த ஜாக்கி படத்தைக் காப்பாற்றியுள்ளது என்பதும் உண்மை
2.75/5
-வெண்பா தமிழ்

