சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நடிகர் சரத்குமார், “இந்தப் படத்தைக் கொடுத்த ஸ்ரீக்கு நன்றி. சித்தார்த் தைரியமான, அற்புதமான நபர். நாளை ‘சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 28 வருடங்களை நிறைவு செய்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைவருக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. வீட்டில் ஒரு செண்டிமெண்ட் அட்டாச் செய்து கதை சொல்லி இருக்கிறார்கள். யதார்த்தமான கதையை அதன் யதார்த்தம் மீறாமல் ஸ்ரீகணேஷ் சொல்லி இருக்கிறார். வாழ்க்கை சவாலானதுதான். அதில் ஜெயித்துக் காட்ட வேண்டும். சமீபத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த நாள் நான் படப்பிடிப்பில் சென்று நடித்தேன். அந்த மனப்பான்மையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியை நினைத்துக் கொண்டே இருந்தால் வெற்றிக் கிடைக்காது. ஏனெனில் நானும் பத்திரிக்கையாளராக இருந்துதான் நடிகன் ஆனேன். சென்னையில் மட்டும் 11 வீடுகள் மாறியிருப்போம். இந்தப் படத்தில் நடிக்கும் போது நாங்கள் அனைவரும் குடும்பமாக மாறி விட்டோம். அருண் விஸ்வா எனது சகோதரர். படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். கனவெல்லாம் நிஜமாகும்” என்றார்.
நடிகை தேவயாணி, “ஃபீல் குட், பாசிட்டிவான படம் இது. சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா அற்புதமான தயாரிப்பாளர். அவர்களிடம் இருந்து கதை வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்ரீகணேஷ் தான் நினைத்ததை நடிகர்களிடம் இருந்து மென்மையான வாங்கி விடக் கூடிய இயக்குநர். படம் அழகாக வந்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து சரத் சாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இப்போதும் ‘சூர்யவம்சம்’ படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. சித்தார்த் ‘பாய்ஸ்’ படத்தில் இருந்து எனது தம்பியுடன் சேர்ந்து பார்த்திருக்கிறேன். எனர்ஜி, திறமையானவர். எல்லா துறைகளிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. அவருக்கு சினிமாவில் எப்போதும் தனியிடம் உண்டு. மீதா, சைத்ரா இருவரும் ஸ்வீட் ஹார்ட்ஸ். அம்ரித்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் உணர்வு. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
இயக்குநர் ஸ்ரீகணேஷ், “ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. அதிகம் யோசிக்காமல் மனதார செய்ய வேண்டும் என்று இயக்கிய படம்தான் இது. இந்த கதையை படித்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தவர் அருண் விஸ்வாதான். அவருக்கு நன்றி. அடுத்து வந்தது சித்தார்த் சார்தான். நல்ல கதையை தேடுபவர் அவர். சரத் சார், தேவயாணி மேம் வந்ததும் கதை முழுமையாகியது. மீதாவுக்கும் நன்றி. வெற்றிப் படம் கொடுத்து விட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருப்பது பெரிய விஷயம். சைத்ராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சதீஷ், தலைவாசல் விஜய் சார், விவேக் பிரசன்னா, ஆவுடையப்பன் எல்லோருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இதயப்பூர்வமாக அம்ரித் வேலை பார்த்தார். எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் ‘3BHK வீடு’ கதை எமோஷனலாக இருக்கும். அதில் இருந்துதான் இந்த படத்திற்கான ஆரம்பம் கிடைத்தது. இப்படியான ஒரு படம் எடுக்கக் காரணமும் என் குடும்பம்தான். என் நண்பர்களுக்கும் நன்றி”.
தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “அம்மா பெயரில் இருந்து ஆரம்பித்த இந்த தயாரிப்பு கம்பெனியில் இருந்து வரும் படங்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். மடோன் அஸ்வின் தான் ஸ்ரீகணேஷை அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராக இந்தப் படம் தயாரித்ததில் திருப்தி. ராம் சார் கொடுக்கும் அங்கீகாரம் மறக்க முடியாதது. ராம் சாரின் ‘பறந்து போ’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். சித்தார்த் சார், சரத் சார், தேவயாணி மேம், மீதா எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அம்ரித் இன்னும் பல உயரங்கள் தொடுவார். உங்கள் பெற்றோர், குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி!”.
நடிகர் சித்தார்த், “சினிமாவுக்கு வந்த பிறகு இது எனது நாற்பதாவது படம். நாற்பது படம் நடித்து விட்டாயா என எனது அப்பா ஆச்சரியமாகக் கேட்டபோது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தும் தயாரிப்பும் எனக்கு தாய் தந்தை. நான் நடித்த நாற்பது படங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன். நாற்பதாவது படத்தை என்னை நம்பிக் கொடுத்த ஸ்ரீ, அருணுக்கு நன்றி. இந்தப் படம் இன்னும் ஸ்பெஷலாக அமைய காரணம் சரத் சார் & தேவயாணி மேம். தேவயாணி, மீதா, சைத்ரா இந்த மூன்று கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனம், பொறுப்புதான் பிரபுவையும் வாசுதேவனையும் நகர்த்தி செல்லும். சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில்தான் இருந்தேன். எனது மனைவிக்காகதான் சமீபத்தில் வீடு வாங்கினேன். இந்தப் படத்தில் நடித்தபோதே வீடு வாங்கியது நல்ல சகுனம். பிடிவாதம் கொண்ட தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் வளர்ந்த குழந்தைதான் ஸ்ரீகணேஷ். அம்ரித் இசையில் இன்னும் பெரிய உயரம் அடைவார். மீதா, சைத்ரா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். என் வீட்டில் ரவியும் இன்னொரு மகன் தான். படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

