தமிழ்சினிமா நீண்டகாலமாக பார்த்து வந்த முக்கோண காதல் கதை
காதல் தோல்வியால் விரக்தியில் வாழ்கிறார் ஹீரோ அர்ஜுன் தாஸ். அவர் வாழ்வில் அதிதி சங்கர் நுழைகிறார். அர்ஜுன் தாஸை அவர் காதலிக்கிறார். அர்ஜுன் தாஸ் அதை மறுதலிக்கிறார். பின் அதிதி சங்கர் அவரை கன்வின்ஸ் செய்து காதலிக்க வைக்கிறார். அர்ஜுன் தாஸும் காதலிக்கிறார். அந்த காதல் கல்யாணத்தை நோக்கி நகர்கையில் அர்ஜுன் தாஸின் முதல் காதலி திரும்புகிறார். அதன்பின் நடந்தது என்ன? என்பது மீதிக்கதை
கதையின் நாயகனாக அர்ஜுன் தாஸ் எமோஷ்னல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். முதல்பாதியின் காதல் காட்சிகளில் மட்டும் தடுமாறுகிறார். அதிதி சங்கரின் கேரக்டர் ஆழமாக எழுதப்படவில்லை என்பதால் அவரது நல்ல நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. மற்றொரு நாயகியான சோனா ஒலிக்கல் இயல்பாக நடித்துள்ளார். கீதா கைலாசம், டிராவிட் செல்வம் முதல் இன்னபிற கேரக்டர்கள் ஒகே ரகம்
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பாடல்களில் அதிக மெனக்கெட்டுள்ளார். அனைத்துப் பாடல்க்ளுமே சிறப்பு. பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது. பாடல் வரிகளை இயக்குநரே எழுதியுள்ளார். ஆகச்சிறப்பான வரிகளை கொடுத்துள்ளார்.
“புத்தரின் அறையில்
அத்தரின் மணமா
சித்தனின் இரவில்
சித்திரை நிலவா”
இந்த வரிகள் ஒரு சோற்றுப் பதம்
அரவிந்த் விஸ்வநாதனின் சிக்கனமான ஒளிப்பதிவு படத்திற்கு இயல்புத்தன்மையைக் கொடுத்துள்ளது
பழக்கப்பட்ட கதை என்பதால் திரைக்கதையில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தால் புதிதாக எதையும் செய்ய இயலவில்லை போல. நிறைய பார்த்துச் சலித்த காட்சிகள் ரசனையைச் சோதிக்கிறது. சில நல்ல லேயர் படத்திலிருப்பதால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு அழகான காதல் கவிதை கிடைத்திருக்கும்!
கேரக்டர்களுக்கான பின்புலத்தையும் அவர்களின் அகத்தேவைகளையும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் சரியாக எழுதி நம் மனதுக்கு நெருக்கமாக்கியிருந்தால், இந்தப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு ஒன்ஸ்மோர் கேட்டிருக்கலாம்.
இருந்தாலும் ஒருமுறை பார்க்கும் விசயங்கள் படத்திலிருப்பதும் மறுப்பதிற்கில்லை
2.75/5
-வெண்பா தமிழ்

