ஒரு தூக்குத்தண்டனை கைதியின் வாழ்வும் வாக்குமூலமும் தான் படத்தின் ஒன்லைன்
ஹீரோ வெற்றி தூக்குத்தண்டனை கைதியாக இருக்கிறார். அவரை தூக்கிலிட அழைத்துச் செல்ல வருகிறார் காவல் அதிகாரி ரங்கராஜ் பாண்டே.. தூக்குமேடைக்குச் செல்லுமுன் தன் வாழ்வை வெற்றி சொல்கிறார்..அந்த வாழ்வின் பயணத்தில் என்ன நடந்தது? என்பதே படத்தின் திரைக்கதை
ஹீரோவாக வெற்றி மிகவும் காத்திரமான வசனங்களைப் பேசுகிறார். சில எமோஷ்னல் காட்சிகளில் தடுமாறினாலும் சில நல்ல காட்சிகளில் தரமாக நடித்துள்ளார். ரங்கராஜ்பாண்டே இந்தப்படத்தில் தன்னை முழுமையான நடிகராக முன்னிறுத்திக் கொண்டுள்ளார். மேலும் சுப்பிரமணியசிவா, கவிதாபாரதி உள்ளிட்டவர்கள் நன்றாக ஸ்கோர் செய்கிறார்கள். நாயகி பிரிகிடா படத்தில் வரும் நேரம் குறைவாக இருந்தாலும் நடிப்பில் நிறைவைத் தந்துள்ளார். லிஸி ஆண்டனி தானொரு ஆகச்சிறந்த நடிகை என்பதை பல காட்சிகளில் உணர்த்தியுள்ளார். மாறன் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை..நடிகர் சரவணனும் அப்படியே! அருவி மதன், கேபிள் சங்கர் உள்ளிட்ட இன்னபிற நடிகர்களும் ஒகே ரகம்
தர்புகா சிவா பாரதியார் மற்றும் பாரதிதாசன் வரிகளுக்கு இசைமூலம் பலம் சேர்த்து இனிமையான பாடல்களாக்கியுள்ளார். பின்னணி இசையும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் M.V. பன்னீர்செல்வம் ஷாட்களில் நிறைய சிக்கனத்தை கடைப்பிடித்துள்ளார்
இயக்குநர் தயாள் பத்மநாபன் முக்கியமான விசயங்களை எல்லாம் வசனங்கள் மூலமே கடத்தியுள்ளார். படத்தின் பலமும் பலவீனமும் அதுவே. கவிதா பாரதி மற்றும் இயக்குநர் இருவரும் வசனங்களை குறைத்து காட்சிமொழியை கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம். தூக்குத்தண்டனைக்கு எதிரான கதைக்கரு மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது
3/5
-வெண்பா தமிழ்

